Saturday, October 4, 2008

புரிந்து போன புதிர், மீண்டும், புரியாமல் போகுதடி!

நீ, உன் முகம் காட்ட, வான் நிலவு தன் முகம் மறைத்த தடி;
நீ, மௌனம் கலைக்க, வானுலாவும் பறவை இனம், மௌனம் ஆனதடி;
ஒலி ஒளி உலகத்தை விட்டு போனதடி.

நான், புரியாமல் தவிக்கிறேன் ;
நீ, புன்னகையில் மிதக்கிறாய்!

பூங்-காற்று என் காதில்,
"நிலவின் களங்கம், இவள் முகத்தில் இல்லை
பறவையின் மொழிப் பிழை, இவள் மொழியில் இல்லை"
என்று சொல்லி போனதடி;
புரியாத புதிரை பூங்காற்று புரியவைத்ததடி.

உலகத்தை காக்க, உன்னை கைதியாக்கி,
என் உள்ளம் என்னும் சிறையில் அடைத்து வைத்தேன்;

மீண்டும்,
நிலவு வானுலாவ வந்தது,
பறவை இனம், பாடத் துவங்கியது;
ஒலி ஒளி உலகத்தை வந்தடைந்தது.

நான்,
"நீ, சினங்கொள்ளாமல் இருக்க;
சிறையெடுத்த காரணத்தை எடுத்துரைக்க" வந்தேன்,

நீ,
புதியதொரு கோணத்தில் புன்னகைத்து நிற்கிறாய் !!

இந்த சிறை உனக்கு பிடித்துப் போனதோ - இதுவினா
விடை தேடமுயல்ந்தேன், பிறகறிந்தேன்
பூவையரின் புன்னகைக் கோரகராதி;
இந்த பூவுலகில் இல்லையடி,
இதுவரை, பூங்காற்று பதில் ஏதும் சொல்லவில்லையடி;
புரிந்து போன புதிறொன்று, மீண்டும், புரியாமல் போனதடி!!

No comments: